’19 பிளஸ்’ உடன் ’13 பிளஸ்’ ஐயும் நாம் மாற்றியமைப்போம் – பிரதமர் மஹிந்த
“புதிய பாராளுமன்றத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைப்போம். அதேவேளை, 13 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைத்தே தீருவோம். இவற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிகவும் அவசியமாகும். அதற்கேற்ற மாதிரி பொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை தர வேண்டும்”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-
“அரசமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் எத்தன்மையானது? அவற்றின் பிரதிபலன் என்ன? என்று அனுபவ ரீதியில் அனைவரும் தற்போது தெரிந்துகொண்டுள்ளோம். இந்த இரண்டு திருத்தங்களையும் மாற்றியமைத்து நாட்டுக்குப் பொருந்தும் வகையில் முரண்பாடற்ற விதத்தில் அரசமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசு தோற்றம் பெற வேண்டும்.
வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் சர்வதேச சூழ்ச்சிகள் 2015ஆம் ஆண்டு செல்வாக்குச் செலுத்தின. எமது அரசுக்கு எதிராகப் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான நிலங்களை ராஜபக்சக்கள் ஆக்கிரமித்து விட்டனர் எனவும், டுபாய் நாட்டில் வங்கிக்கணக்கில் பெருமளவான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது எனவும் ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அக்கட்சி தேர்தல் தொகுதிகளில் ஒரு ஆசனத்தையேனும் பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி மீது கொண்டுள்ள வெறுப்பால் கட்சியைப் பிளவுபடுத்தியுள்ளார்.
நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்பும் திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளார். அந்தத் திட்டங்களைச் செயற்படுத்தும் அரசை மக்கள் தோற்றுவிக்க வேண்டும். முரண்பாடான தன்மை மீண்டும் தோற்றம் பெற்றால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்காது. ஆகவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலமான அரசைத் தோற்றுவிக்க வேண்டும்” – என்றார்.