பொலிஸாரின் தொல்லைகளையடுத்து தேர்தல் போட்டியிலிருந்து விலகுகின்றார் பாலித!

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தேவரப்பெரும், பாராளுமன்ற  தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு அருகில்   ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறந்துபோன எனது மகனின் பெயரில் தானம் வழங்குவதற்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை ஒன்றை அப்புறப்படுத்தச் சென்ற மத்துகமப் பொலிஸார் சிலர், எனது மனைவியைத் தள்ளிவிட்டதன் காரணமாக அவர் தற்போது நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய வந்தேன்.

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் எனக்குத் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்தத் தொல்லைகள் காரணமாக எனது மனைவியும் மகனும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நான் அரசியலில் ஈடுபட்டுள்ளதன் காரணமாகவே இந்தத் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன.

இதனால், எனது மனைவி, பிள்ளைகளின் பெறுமதியை நான் புரிந்துக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன். அத்துடன் அரசியலில் இருந்து விலகி, மனைவி, மகனுடன் வாழப் போகின்றேன்.

இது தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் எப்போதும் பிரச்சினை இருந்ததில்லை. சஜித் பிரேமதாஸவின் செயற்பாடுகளுக்கு எதிராக இம்முறை தேர்தலில் களம் இறங்கினேன்.

எனக்குக் கொடுக்கப்படும் இந்தத் தொல்லைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியே காரணம் என நான் நினைக்கின்றேன். இன்று காலை ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்துறை செயலாளரைச் சந்தித்து அதனடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்தேன். ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே, ரணில் விக்கிரமசிங்க மீதோ எனக்கு இருக்கும் அதிருப்தி காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!