கரும்புலிகள் தினத்தில் குண்டை வெடிக்க வைக்கத் திட்டம் – ஆங்கிலப் பத்திரிகை செய்தி
கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது. இயக்கச்சியில் தயாரிக்கப்பட்ட குண்டை முல்லைத்தீவில் வெடிக்கவைப்பதற்கான திட்டம் காணப்பட்டது எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்று ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் போராளிகளும் கிளிநொச்சியைச் சேர்ந்த பல இளைஞர்களும் கரும்புலிகள் தினத்தைக் நினைவு கூரத் திட்டமிட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் பேராளியின் மனைவியையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளியாவார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் போராளியான மேனன் என்பவரே கடந்த சனிக்கிழமை குண்டைத் தயாரிக்க முயற்சி செய்தபோது குண்டு வெடித்து காயமடைந்தவராவார்
குண்டு வெடிப்பில் காயமடைந்த மேனன் முதலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேனனின் வீட்டைச் சோதனையிட்ட போது இரு குண்டுகளையும், வெடிக்கவைக்கும் கருவிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர். முன்கூட்டியே குண்டு வெடித்ததன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் கரும்புலிகள் தினத்தில் தங்கள் திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும், விடுதலையான பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்தவர் எனவும் தெரியவந்துள்ளது என விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் கரும்புலிகள் தினத்தைக் கடைப்பிடித்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.