சுகாதார வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிப் பிரசாரங்கள் முன்னெடுப்பு – கபே குற்றச்சாட்டு
“தேர்தல் வெற்றியை மாத்திரம் கவனத்தில்கொண்டு செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பின்போது மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்” – நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பன்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்று கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் ஒன்றான ஒரு மீற்றர் சமூக இடைவெளியை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பொதுமக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் பரவக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில்கொள்ளாமல் தேர்தல் வெற்றியை மாத்திரம் கவனத்தில்கொண்டு செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பின்போது மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்” – என்றுள்ளது.