பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதியற்றவரே சுமந்திரன் – கருணா
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/kauna.jpg)
“தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதியற்றவர்தான் சுமந்திரன். அன்ரன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஓர் இராஜதந்திரி ஆவார்.”
– இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வேட்பாளர் தியாகராசா ஞானேந்திரனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கு ஒப்பானவர் எனக் கூறியிருந்தார்.
அன்ரன் பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதியற்றவர்தான் சுமந்திரன். அன்ரன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஓர் இராஜதந்திரி ஆவார். வடக்கு, கிழக்கு என்னவென்று தெரியாத சுமந்திரன் கொழும்பிலே வளர்ந்தவர்.
75 கள்ள வாக்குகள் போட்டவன் என்று தன் வாயாலே கூறிய ஒருவர்தான் சிறிதரன். அவருடைய கருத்துத் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பவனி வருவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கின்றோம்.
வர்த்தகர்களையும், மதுபானசாலை உரிமையாளர்களையும், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களையும் வேட்பாளர்களாகத் தெரிவு செய்தால் அவர்கள் எப்படி சேவை செய்வார்கள்? ஒப்பந்தம் செய்வது எப்படி என்றுதான் அவர்கள் சிந்திப்பார்கள். இதை விளங்கிக்கொள்ளாமல் தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு திரிகின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் நான் தமிழ்க் கட்சியில் போட்டியிடுகின்றேன். அம்பாறை தமிழர்கள் ‘மொட்டு’ கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க ஏதுவாக அமையும். ஆதலால் தமிழ் மக்கள் ‘மொட்டு’க்கு வாக்களிப்பதற்குப் பதிலாக எமக்கு வாக்குகளை வழங்குங்கள்” – என்றார்.