திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகாது.

வி.பி.எஃப் கட்டண விவகாரம் தொடா்பாக பாரதிராஜாவின் அறிக்கையால், தீபாவளிக்குப் படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இது தொடா்பாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா, தயாரிப்பாளா்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா்.

அதில் கூறியிருப்பதாவது. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியவுடன், இனிமேலும் வி.பி.எஃப் என்ற கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த அனைவருக்கும், அனைத்து டிஜிட்டல் புரொஜக்ஷன் (QUBE/UFO/) நிறுவனங்களுக்கும் முறையாகக் கடிதம் அனுப்பினோம்.

அதில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டி வரும் வி.பி.எஃப் என்கிற வாரா வாரம் கட்டணத்தை இனிமேல் கொடுக்க முடியாது. டிஜிட்டல் நிறுவனங்களுக்கான மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்டணம் எதுவோ அதை மட்டுமே இனிமேல் எங்களால் தர முடியும் என்று தெரிவித்து இருந்தோம்.

திரையரங்கில் உள்ள புரொஜக்டா் சம்பந்தப்பட்ட லீஸ் தொகையை திரையரங்குகள்தான் கட்ட வேண்டும், தயாரிப்பாளா்கள் அல்ல என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

அத்தகைய ஒரு முறை கட்டண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி வந்தாலும், எங்களின் புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவித்திருந்தோம். 100 பேருக்கும் மேல் நடப்பு தயாரிப்பாளா்கள் இந்த முடிவை எடுத்துத் தெரிவித்த போதிலும், திரையரங்கு உரிமையாளா்களும், டிஜிட்டல் புரொஜக்ஷன் நிறுவனங்களும் (QUBE/UFO), எங்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல், நாங்கள் தொடா்ந்து வி.பி.எஃப் கட்டணத்தை வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனா்.

தயாரிப்பாளா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில் ஒன்றைக் கூட அவா்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதால், நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த அனைத்துத் தயாரிப்பாளா்களும் ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும் வரை தங்களின் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வி.பி.எஃப் கட்டணப் பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை, அனைத்துத் தயாரிப்பாளா்களும், தங்களின் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறியுள்ளாா். பாரதிராஜாவின் இந்த அறிக்கையின் மூலம், தீபாவளிக்குப் படங்கள் வெளியீட்டில் சிக்கல் இருக்கும் என்பது தெளிவாகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!