வடக்கில் கொரோனாவுக்கு முடிவுகட்ட தீவிர நடவடிக்கை
“வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக வடக்கு மாகாணத்தினுள் கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களைத் தடுப்பதற்காகக் கடற்படையினர் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.”
– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கடலோரப் பாதுகாப்பையும் கடந்து யாராவது அத்துமீறி உள்நுழைவார்களாயின் அல்லது உள்நுழைந்து மறைந்திருப்பார்களாயின் கரையோர வாழ் வடபிராந்திய மக்கள் உட்பட யாரும் அருகில் உள்ள பொதுச்சுகாதார அதிகாரிகளிடத்திலோ அல்லது பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அத்துடன் அண்மைய நாட்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அடையாளங்களை காணுமிடத்து உடனடியாக வைத்திய பரிசோதனைகளுக்குத் தங்களை ஈடுபடுத்தவதே பொருத்தமானதாகும்.
யாழ். போதனா வைத்தியசாலையிலும், யாழ்.பல்கலைக்கழகத்திலும், பி.சி.ஆர். பரிசோதனைகள் கிரமமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே பொதுமக்கள் இயல்பான சந்தேகங்கள் ஏற்படுமிடத்து எவ்விதமான அச்சமும் அடையாது பரிசோதனைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முடியும்.
இதைவிட, அனைத்துப் பொதுமக்களும் பொதுவெளியில் நடமாடுவதை இயன்றளவில் தவிர்ப்பதுடன், முகக் கவசம் அணிதல், கை சுத்திகரிப்பு திரவத்தை பயன்படுத்தல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் ஆகிய மூன்று விடயங்களையும் பின்பற்றுதலும் அவசியமானதாகின்றது.
சமூகப் பொறுப்புடன் வடக்கு வாழ் ஒவ்வொரு பிரஜைகளும் நடந்து கொள்வதுடன் மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் மற்றும் பொதுசுகாதரப் பணியாளர்கள் விசேட கவனம் கொண்டிருப்பதும் அவசியமாகின்றது. அதற்குரிய அறிவுத்தல்களையும் நான் வழங்கியுள்ளேன்.
மங்கல, அமங்கல நிகழ்வுகளின்போது வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவ அவசியமாகின்றது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்குத் திட்டமிட்டு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது முக்கியமான விடயமாகின்றது” – என்றுள்ளது.