தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்லர் – மிருசுவில் கூட்டத்தில் சிறிதரன்
தமிழர்கள் அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்லர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
மிருசுவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது:-
“தமிழர்களாகிய நாம் எம்மை நாமே இந்த மண்ணிலே ஆளவேண்டும் என்பதற்காக 70 வருடங்களாகப் போராடி வருகின்றோம். கோட்டாபாய ராஜபக்சவின் அரசில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் தமிழர் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்காகத்தான் போராடினார்கள், பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படுமானால் அவர்கள் போராடமாட்டார்கள் என்றும், தமிழ்த்தலைமைகள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்றும் கருத்துக் கூறி வருகின்றார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் அவர்கள் அரசுடன் பேச்சுகளில் ஈடுபடும்போது எமது மக்களுடைய பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும், எமது மக்களின் இயல்பு நிலை முன்னேற்றம் தொடர்பாகவும் பேசியிருந்தார்கள். அதைத் தலைவர் நேரடியாக ஊடகவியலளார் சந்திப்பில்கூட தெரிவித்திருந்தார்.
சுனாமி வேளையில் செரான் என்கின்ற பணியகத்தை நிறுவி அதனூடாக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமது மக்களின் பொருளாதார வாழ்வை முன்னேற்றுவதற்காக முயன்ற வேளை அப்போது இருந்த சந்திரிகா அரசால் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஆகவே, தமிழ் மக்கள் தாமாகவே தமது பொருளாதாரத்தை மேம்படுத்த, சிங்கள பேரினவாத அரசுதான் தடையாக உள்ளதே தவிர தமிழ்த் தலைமைகள் எப்போதும் எங்களின் மக்களினுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தடையாக இருந்தது கிடையாது.
எமக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறுமானால் எமது மக்கள் தாமாகவும் புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடனும் எமது தேசத்தைக் கட்டியெழுப்புவோம். இன்று எமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்பது மிகவும் பிரச்சினையாக இருக்கின்றது. நிலையான அரசியல் தீர்வு கிடைக்கப் பெற்றால் இவை எமக்கு ஒரு பிரச்சினையே இல்லை. ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் எமது இளைஞர்களுக்கு வேலையில்லாத பிரச்சினை இல்லாமல் இருந்தது. சேரன் சுவையூற்று, பாண்டியன் சுவையூற்று, வருவாய்ப்பகுதி, ஆயப்பகுதி, வைப்பகங்கள் என்பவற்றினூடாக எமது மக்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பை வழங்கியிருந்தார்கள்” – என்றார்.
குறித்த மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சசிகலா ரவிராஜ், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சயந்தன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.