கொரோனாவால் இரத்த வகைகளுக்கு தட்டுபாடு
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், யாழ். மாவட்ட வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சுகாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்கெனவே ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும் இரத்ததான முகாம்கள் பிற்போடப்பட்டமையே, இரத்த தட்டுப்பாட்டுக்கு காரணமென்றார்.
இதனைக் கருத்திற்கொண்டு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கு, தினமும் காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியுமெனவும், அவர் கூறினார்.
மேலதிக விவரங்களுக்கு 077-2988917 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறும், பிரதீபன் தெரிவித்தார்.