எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியாது சீருடையின் கௌரவத்தைப் பாதுகாக்கவும்!
“எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணியாது தமது சீருடையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொலிஸார் செயற்படுவது முக்கியமாகும். தமது பிரதேசங்களில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு அந்தந்த மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும்.”
நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ்துறை உயர் அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
“குற்றச் செயல்களைத் தடுக்க முடியாமல்போனால் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதற்கும் வெட்கப்பட வேண்டும். எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணியாது தமது சீருடையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவது முக்கியமாகும்.
சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம். அவ்வாறான தவறுகளுக்கான பொறுப்புக்கூறலிலிருந்து அந்தந்த மாகாணங்களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் வரையான சகலரும் சுலபமாக நழுவிவிட முடியாது. மாறாக இம்மாகாணங்களில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கான பொறுப்பை அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமது கடமைகளை ஏனைய தொழில்கள் போல் கணக்கெடுக்காமல் நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை உங்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு செயற்படுவது மிகவும் அவசியம்” – என்றார்.