மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள்
தாய்லாந்து நாட்டிலுள்ள கடைகள் பலவற்றில் ஸ்கேனருடன் கூடிய தானியங்கி கதவை நிறுவியுள்ளனர். முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என ஸ்கேன் செய்து, அணிந்தவர்களுக்கு மட்டுமே இக்கதவுகள் திறக்கிறது.
பிரபல சுற்றுலா நாடான தாய்லாந்து, கொரோனா வைரஸ் தொற்றால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 2019ல் தாய்லாந்தின் புக்கட் நகருக்கு ஒரு கோடி சர்வதேச பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்களை நம்பியே நாட்டின் பொருளாதாரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்கவில்லை. தற்போது தான் அதற்கான தடையை நீக்கி மாதம் குறிப்பிட்ட அளவிலான வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்க உள்ளனர்.
தற்போது அந்நாட்டில் சுமார் 200 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். 59 பேர் இறந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை உயரும் என்ற அச்சமும் மக்களிடம் உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள சிறிய மற்றும் பெரிய கடைகள் பலவற்றில் தானியங்கி கதவும், ஸ்கேனர்களும் பொருத்தியுள்ளனர். மாஸ்க் அணிந்துள்ளார்களா என அந்த கருவி ஸ்கேன் செய்கிறது. அணிந்திருந்தால் அவர்களுக்கு கதவு திறக்கிறது. அணியாதவர்களுக்கு ‘அனுமதி இல்லை’ என அறிவிக்கிறது. இந்த வீடியோ டுவிட்டரில் 67 லட்சம் பேரால் இதுவரை பார்க்கப்பட்டுள்ளது.