அறிகுறிகள் இன்றி ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி வரும் மினுவாங்கொடை ‘பிரெண்டிக்ஸ்’ ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

‘பிரண்டிக்ஸ்’ ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் நேற்று பிற்பகல் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“மினுவாங்கொடையில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஊழியரை ஆரம்பத்தில் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்களுக்கும் தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களுக்கும், எங்களிடம் உள்ள புதுவிபரங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் மொத்தம் 1,394 பிரண்டிக்ஸ் ஊழியர்கள் கொரோனாத் தொற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதன்போது அதிக அளவு பரிசோதனைகள் இடம்பெற்றதால் ஊழியர்களுக்குச் சில நேரம் காத்திருப்பதற்கு நேர்ந்தது. இதுவரை, 567 ஊழியர்களுக்கு (நேற்று பிற்பகல் வரை) நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை அல்லது கொரோனாவுடன் தொடர்புடைய அறிகுறிகள் காட்சியளிக்காதவை. இந்தச் செயல்முறை முழுவதும் நாம் அனுபவித்த முக்கிய சவால்களில் ஒன்றாக அமைந்தது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளைத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இடமாற்றும்போது பாதிக்கப்பட்டவர்களின் வசதியைக் கவனிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றோம். மேலும், அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு வசதியாக இருக்க உதவும் அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் எடுத்து வருகின்றோம்.

எங்கள் ஊழியர்கள், சமூகங்கள் மற்றும் நமது தேசத்தின் நல்வாழ்வு எங்கள் முன்னுரிமையாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் எங்களுக்கு அளித்த ஆதரவையும் ஆலோசனையையும் நாங்கள் மிகவும் பாராட்டுகின்றோம்” – என்றுள்ளது.
…….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!