சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க முடிவு
சர்வதேச சிறுவர் தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தால் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது,
“எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி மூன்று வருடங்களுக்கும் மேலாக நாம் போராட்டங்ளை முன்னெடுத்து வருகின்றோம். எனினும், எமக்கான நீதியை எந்தவொரு அரசும் வழங்கவில்லை.
நாளைமறுதினம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை நாம் துக்கதினமாக அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் ஜனநாயக ரீதியான எமது போராட்டங்களுக்கு அரசால் பல்வேறு அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்படுவதால் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவான நிலையில் காணப்படுகின்றது.
எமது உறவுகளைத் தேடியே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதையும் இந்த அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
எனவே, எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்தப் போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம்” – என்றனர்.
மேலும், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “எங்கே எங்கே உறவுகள் எங்கே?”, “தமிழ்க் குழந்தைகளும் பயங்கரவாதிகளா?”, “பச்சிளம் குழந்தைகளை என்ன செய்தாய் சொல் அரசே?”, “பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே?”, “அரசின் பொறுப்பற்ற பதில்களைக் கண்டிக்கின்றோம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.