கெடுபிடிகளுக்கு மத்தியில் வெடுக்குநாறி ஆலயத்தில் பொங்கல் விழா
வவுனியா – வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதி நாளான நேற்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று நேற்று பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட பூஜை நிகழ்வுகளுடன் கோலாகலமாக பொங்கல் விழா நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.காலை11 மணிக்கு ஆரம்பமாகிய பூஜையில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சட்டத்தரணி மணிவண்ணன் , புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், ஆலயத்திற்கு வருகைதரும் பக்கதர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆலயத்திற்குள் செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியை அண்டி இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளது. அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.