வடக்கு – தெற்கு என்ற பேதம் நாட்டின் அபிவிருத்தியில் இல்லை – பிரதமர்
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களின் போது வடக்கிற்கு ஒன்று தெற்கிற்கு ஒன்று என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், 2005 – 2010ஆம் ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டதனை நினைவு கூர்ந்த பிரதமர், அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் திட்டங்களுடன் தாம் செயற்பட்டதாகக் கூறியுள்ளார்.
தங்கள் அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தவிர, முந்தைய நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை எனவும்,
வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட, அந்த மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்பட்டதாகவும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினையான குடிநீர்ச் சிக்கலுக்கு தீர்வு காண தமது அரசாங்கம் முதலிடம் வழங்குவதாக தெரிவித்த பிரதமர், தற்போது அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.