13 விருதுகளை வென்று சாதனை படைத்த “மண்குளித்து” நாடகம்!

இலங்கை கலாசார அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் அரச நாடகக் குழு இணைந்து 2020 ஆம் ஆண்டின் 48வது அரச நாடக விழாவினை கடந்த பெப்ரவரி மாதம் நடாத்தியிருந்த்து. இதில் மண்குளித்து நாடகம் 26.02.2020 அன்று எல்பிஸ்டன் திரையரங்கில் போட்டிக்காக அரங்கேறியது.

இந்த போட்டி நிகழ்வு மூன்று சுற்றுக்களாக இடம் பெறும். மூன்றாவது சுற்றே இறுதிச் சுற்றாகும். இவ் வருடம் 32 குறுநாடகப் பிரதிகளும் 20 நெடுநாடக பிரதிகளும் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக அறிய கிடைக்கின்றது. இதில் இறுதிச் சுற்றுக்கு 5 குறுநாடகங்களும் 2 நெடுநாடகங்களும் தெரிவாகியிருந்த்து. இறுதிச் சுற்றின் போட்டி முடிவுகள் 11.09.2020 அன்று மாலை 6.00 மணிக்கு கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அருணாசலம் சத்தியானந்தன் மற்றும் பிரதீப்ராசா அவர்களுடைய நெறியாள்கையில் “மண்குளித்து” நாடகம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன் 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்றது.
• சிறந்த தயாரிப்பு
• இயக்கம்
• நாடக நயனம்
• ஒளியமைப்பு
• இசை
• நடிப்பு
• அரங்கமுகாமைத்துவம்
• சிறந்த நாடக எழுத்துருவாக்கம் ஆகியவையாகும்.

இந் நாடகம் கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பங்குபற்றியிருந்தது. 48 வருட தேசிய நாடக விழா மரபில் கிளிநொச்சி மாவட்டம் முதற்தடவையாக பங்குபற்றியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் 12 மாவட்டத்தினைச் சேர்ந்த அணிசேர், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக மட்ட நாடக செயற்பாட்டாளர்களின் இணைவில் பிரமாண்டப் படைப்பாக உருவாகியிருந்தது.

குறுநாடக பிரிவிலும் இதே குழுவினரை சேர்ந்த ஸ்ரீகாந் அவர்களின் நெறியாள்கையில் உருவாகிய “அங்கீகாரம்” நாடகம் ஆண்டின் சிறந்த தயாரிப்பாக முதலாமிடம் பெற்றதுடன் சிறந்த இயக்குனர், தயாரிப்பு, மேடையமைப்பு, பிரதி, நடிப்பு, ஒளியமைப்பு பிரிவுகளில் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!