இந்திய மீனவர்களின் அடாவடியைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன ஊர்வலம்
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி – அத்துமீறி மீன்பிடிப்பதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும், தொழில் உபகரணங்கள் நாசமாக்கப்படுவதைக் கண்டித்தும் வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.
வடமராட்சி கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் மிக அதிகளவில் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர். கரையில் இருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தூரத்தில் நின்று மீன்பிடிக்கின்றனர். தடை செய்யப்பட்ட றோலர் படகுகளை அவர்கள் பாவிப்பதால் வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது கடலில் விடப்படும் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளும் இந்திய மீனவர்களினால் அறுத்து நாசம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்திய மீனவர்களின் இந்த அடாவடியைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள், வாயை மூடிக்கட்டி மெளன கவனயீர்ப்பு ஊர்வலத்தை இன்று முன்னெடுத்தனர்.
நல்லூர் முன்றலில் இருந்து முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகிய மெளன கவனயீர்ப்புப் பேரணியானது, யாழ்ப்பாணத்திலுள்ள துணை இந்தியத் தூதரகத்தைச் சென்றடைந்தது. அங்கு இந்தியத் துணைத் தூதரிடம் வடமராட்சி மீனவர்களின் சார்பில் மகஜர் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து யாழ்.நகரிலுள்ள நீரியல் வளத்துறை அமைச்சரின் அலுவலகத்துக்குச் சென்ற வடமராட்சி மீனவர்கள், அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
அதன்பின்னர் நீரியல் வளத்துறைத் திணைக்களம், யாழ். மாவட்ட செயலகம் என்பவற்றுக்குச் சென்று மகஜர் கையளித்த வடமராட்சி மீனவர்கள், இறுதியாக வடக்கு மாகாண ஆளுநரிடமும் மகஜரைக் கையளித்தனர்.