பிரதமர் உத்தரவையடுத்து பொம்மைவெளி சென்று ஆராய்ந்த இந்திக்க அனுருத்த

யாழ்ப்பாணம் – பொம்மைவெளிப் பகுதியில் வீடமைப்புத் திட்டத்தைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்தொடர்பாக ஆராய்வதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவை குறித்த பகுதிக்குச் சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் உத்தரவு பிறப்பித்தமைக்கமைய இராஜாங்க அமைச்சர் இன்று அங்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.

பொம்மைவெளிப் பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது எனவும், தமக்கான வீடமைப்புத் திட்டத்தை அமைத்துத் தர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன்போது, சிறுவனொருவன், “மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித் தரமாட்டிங்களா?” என்ற பதாகையொன்றை ஏந்தியிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்தப் புகைப்படத்தை நேற்றுப் பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அப்பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு, பொம்மைவெளிப் பகுதிக்கு நேரில் சென்று குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனும் இதன்போது உடனிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!