கொரோனா தொற்று தொடர்பில் யாழ். மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் பரவியுள்ளது. எனவே, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கடற்கரையை அண்டிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் விசேட, கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் அண்மையில் தொண்டமானாறுப் பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்திறங்கிய 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். எனினும் இன்னும் எத்தனை பேர் சட்டவிரோதமாக வருகை தந்துள்ளார்கள் என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது. இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநராலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

கடற்கரையை அண்டிய பகுதிகளில் உள்ள பிரதேச செயலர்கள் தமது பிரதேசமட்டத்தில் கட்டாயமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராக வேண்டும். தங்களது பிரதேசங்களில் அந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், கடற்படையினர், காவல்துறை, இராணுவத்தினர், அப்பகுதி பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகளின் பங்குபற்றுதலோடு மாதத்தில் இரண்டு தடவைகள் கூட்டங்களை வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அண்மையில் நெடுந்தீவில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. எனினும் பொதுச் சுகாதார பரிசோதகரின் துரித முயற்சியால் உடனடியாக அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க எதிர்வரும் காலங்களில் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோர் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் இதற்குரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது என்று பணிப்பாளார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!