லெபனானுக்கு இலங்கை வழங்கிய தேயிலைக்கு நடந்தது என்ன? புதிய சர்ச்சை
லெபனானில் இடம்பெற்ற வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என இலங்கை வழங்கிய தேயிலையை ஜனாதிபதி மிசேல் அவுன் தனது மெய்ப்பாதுகாவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் நான்காம் திகதி இடம்பெற்ற வெடிவிபத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத லெபனானில் அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் ஊழலுக்கு இது ஒரு உதாரணம் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சமாதான காலத்தில் லெபனானில் இடம்பெற்ற மோசமான பேரிடரை தொடர்ந்து அந்த நாட்டுக்கு உடனடியாக உதவிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையை சேர்ந்த பலர் லெபனானில் பணிபுரிகின்றனர்.
லெபனான் ஜனாதிபதி இலங்கை தூதுவரிடமிருந்து ஆகஸ்ட் 24 ம் திகதி தேயிலையை பெறும் படத்தை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டிருந்ததுடன், பெய்ரூட் வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொழும்பு இலங்கை தேயிலையை வழங்கியுள்ளது என தூதுவர் தெரிவித்தார் என குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை வழங்கிய தேயிலைக்கு என்ன நடந்தது என லெபனானின் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
லெபனான் இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட இலங்கை தேயிலைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு லெபனான் ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார். அந்த தேயிலையை ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படைவீரர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கியுள்ளோம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும எழுந்துள்ளன.
லெபனானில் உள்ள வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இலங்கை தேயிலையை வழங்கியது; அதுதேவையில்லாதவர்களுக்கு அனுப்பப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். உங்கள் மெய்ப்பாதுகாவலர்களுக்கு அதனை வழங்குவது வெட்கக்கேடான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.