புதிய அரசமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ்ப் பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள் – மனோ
புதிய அரசமைப்பு வரைவை வரைவதற்கான குழுவில் மலையகத் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணி எழுத்து மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளது எனக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கான எழுத்து மூலக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“புதிய அரசமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கி ன்றோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகின்றோம். இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. எனினும், இந்த நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகின்றது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.
எனவே, தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதிவாய்ந்த பிரதிநிதிகளின் பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருக்கின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.