தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 222 கடற்படையினர் அனுப்பிவைப்பு
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 222 கடற்படையினர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
கொரேனா வைரஸ் தொற்று தாக்கத்தைத் தொடர்ந்து வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 250 கடற்படையினர், கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தில் கடந்த 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 222 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 27 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வைசாத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 223 கடற்படையினரிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தநிலையில் 222 பேரும் கடற்படைக்குச் சொந்தமான 05 பேருந்துகளில் அவர்களின் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களை அனுப்பி வைக்கும் நிகழ்வு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது.