முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் அரச புலனாய்வாளர்கள் – முன்னாள் எம்.பி. சார்ள்ஸ்
“கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அரச புலனாய்வாளர்கள் வன்னியில் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கின்றனர். முன்னாள் போராளிகள் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். அரச புலனாய்வாளர்களின் இந்த அச்சுறுத்தல் குறித்து முன்னாள் போராளிகள் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – குமுழமுனைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவுக்குப் பிரதமர் பதவியை வழங்கினார். ஆனால், மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்கள் பெற முடியாமல்போனது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழப்ப நிலைகள், தமிழ் மக்களுடைய அபிப்பிராயம் ஆகியவற்றுக்கு அமைவாக 33 நாட்களுக்குப் பின்னரே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கினோம்.
எங்களுடைய மக்கள் மஹிந்த ராஜபக்சவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால்தான் உங்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் விளக்கமாக எடுத்துக்கூறியிருந்தோம்.
அவ்வாறான ஒருவருக்கு நீங்கள் பிரதமர் பதவியைக் கொடுத்துள்ளீர்கள். எனவே, உங்களுக்கு நாம் ஆதரவளிக்க முடியாது என்பதையும் விளக்கமாகக் கூறினோம்.
தற்போது கடந்த 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு முன்னாள் போராளிகள் பலர் பயந்த நிலையிலேயே தமது வாழ்க்கையை நடத்துகின்றார்கள்.
முன்னாள் போராளிகள் பலர் தாம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு இடர்பாடுகளை என்னிடம் தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு அரச புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கின்றனர். முன்னாள் போராளிகள் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பில் முன்னாள் போராளிகள் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். இவ்வாறாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு ஓர் இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” – என்றார்.