அரசு ஜனநாயகத்திலிருந்து பின்னோக்கி செல்கின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஜனநாயக ஆட்சியிலிருந்து பிற்போக்கான ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்கின்றது எனவும் இதனை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிலுள்ள பிரச்சினைகளில் அரசியலமைப்பு பிரச்சினை பிரதானமானது அல்ல. அதிகாரங்கள் அனைத்தையும் ஒருவரிடம் ஒப்படைத்து ஜனநாயக ஆட்சியிலிருந்து பிற்போக்கான ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்கிறது.

சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய அதிகரத்தைக் கொண்ட மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற நாடாளுமன்றத்தை ஒரு வருடத்திலும் கலைக்க முடியும் என்ற அதிகாரத்தை 20 இல் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று நீதித்துறை நியமனங்கள் தொடர்பான அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன.

முன்னரைப் போன்றல்லாமல் முழுமையாக ஜனாதிபதிக்கு தேவையானவர்களை மாத்திரம் கொண்ட ஆணைக்குழுக்களே 20 இன் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. அமைச்சரவை, நாடாளுமன்றம், நீதித்துறை என அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி தன்வசப்படுத்தியுள்ளார்.

பிரதமருடைய அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடைய ஆட்சியின் கீழ் செயற்பட்ட பிரதமர்களின் நிலையே தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது.

பசில் ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதை விட அதற்காக அரசியலமைப்பை மாற்றியமைப்பது சிறந்தது எனக்கருதி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அது மாத்திரமின்றி மக்களின் அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி மீறினாலும் அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.

அவசர சட்டத்தைக் கொண்டு வருவதற்காக அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு காணப்படுகின்ற உரிமையை நீக்குவதற்கு குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!