விக்கியின் உரையை நீக்குமாறு கோர எவருக்கும் எந்த உரிமையும் இல்லை – வாசு
“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை பாராளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டிய தேவையும் இல்லை.”
– இவ்வாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனைத் தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அதனை பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாருக்கும் முடியாது. சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் பாராளுமன்ற ஹன்சாட்டில் பதிவாகி இருக்கின்றது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நிலைப்பாட்டை அங்கு தெரிவிப்பதற்கு உரிமை இருக்கின்றது. அதனடிப்படையிலே சபாநாயகர் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை. அத்துடன் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அனைவரும் இணங்க வேண்டும் என்றில்லை” – என்றார்.