பாகிஸ்தான் விமான விபத்து: கொரோனா குறித்தான பேச்சே காரணம்
பாகிஸ்தானில் கடந்த மாதம் 97 பேரின் உயிர்ப்பலிக்கு காரணமான விமான விபத்து, விமானி மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் மனித தவறால் நிகழ்ந்தவை என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் கடமை நெறிமுறையை பின்படுத்த தவறிவிட்டனர் என பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து பேசிக் கொண்டு இருந்ததால் விமானிகள் கவனத்தை சிதறவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 22ஆம் தேதி கராச்சி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் இரண்டு பேர் மட்டுமே உயிர் தப்பினர். 97 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஏர்பஸ் 320 விமானத்தில் எந்த கோளாறும் இல்லை என கான் தெரிவித்தார்.
“முதலில் விமானி சரியாக விமானத்தை தரையிறக்கவில்லை. எனவே அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து மீண்டும் புறப்படுவதற்கு முன்பு தடுமாறியது. இரண்டாவது முறையாக தரையிறங்கும்போது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் இயந்திரம் மோசமாக பாதிப்படைந்ததை தெரியப்படுத்தவில்லை,” என அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
“கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தின் உயரத்தை அதிகரிக்குமாறு கூறியபோது, நான் பார்த்துக் கொள்கிறேன் என விமானி தெரிவித்தார். அவர் அதீத நம்பிக்கையுடன் இருந்துவிட்டார்” என்கிறார் கான்.
இதுகுறித்த விரிவான அறிக்கை ஒரு வருட காலத்திற்குள் வெளியாகும் என்றும், அதில் விமான விழும்போது பதிவாகிய ஒலிப் பதிவுகளிலிருந்த விவரங்களும் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையை அரசு மறுசீரமைக்கும் என்றும் உறுதியளித்தார். பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.