ஐ.தே.கவின் அதிகாரத்தை மீட்க ஐக்கிய மக்கள் சக்தி சதித்திட்டம் – வஜிர அபேவர்தன
“ஐக்கிய மக்கள் சக்திக்கு சட்ட ரீதியாக ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் சதித்திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை தற்போது வெளிப்பட்டுள்ளது.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவரை தமது கட்சிக்கு அழைப்பதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை அடிமையாக்குவதற்கு சூழ்ச்சியை முன்னெடுக்கின்றது.
அன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் அரசில் இணைந்து கொண்டு இன்று கட்சியின் முன்னேற்றம் குறித்து கரு ஜயசூரிய பேசுவது வேடிக்கையாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கு சட்ட ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் சதித்திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை தற்போது வெளிப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை சதித்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் இவ்வாறான சதித்திட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போதில்லை” – என்றார்.