கூட்டமைப்பின் பங்காளிகள் ஓரணியில் இந்தியத் தூதுவருடன் முக்கிய சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சந்தித்து தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்த இந்தியத் தூதுவர், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.