புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழிநடத்தப்படும் அமைச்சுக்களும் உள்ளடங்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள்,சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்டநிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள்பற்றிய வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கைப் பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்தில்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்கும் உரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர் – என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!