குடும்பம் – கட்சி இரண்டாகப் பிளவுபட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் – மகிந்த
“பிரச்சினையின் காரணமாக குடும்பம், அரசியல் கட்சி ஆகியவை இரண்டாகப் பிளவுப்பட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். பலமான ஐக்கிய தேசியக் கட்சியை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவே பலவீனப்படுத்தி இல்லாதொழித்துள்ளார். மக்களுக்கும், ஊருக்கும் சேவையாற்றுபவர்களை மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உள்ளகப் பிரச்சினையின் காரணமாக குடும்பம் மற்றும் அரசியல் கட்சி பிளவுப்பட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். வரலாற்று பின்னணியைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதற்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்புக் கூறவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரக் கருத்துக்கள் மீண்டும் பொதுத்தேர்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் நகைச்சுவையான பிரசாரங்களை முன்னெடுப்பது முக்கியமல்ல. மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற வேண்டும்.
நாட்டுக்கும் , ஊருக்கும் சேவையாற்றுபவர்களை நாடாமன்றத்துக்கு இம்முறை தெரிவு செய்யுங்கள். அதிகார முரண்பாடுகளினால் கடந்த அரசு செயற்பட்ட விதத்தை மக்கள் நன்கு அறிவார்கள். முறையற்ற செயற்பாடுகள் அனைத்துத் துறைகளையும் பலவீனப்படுத்தியது.
2015ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த அரசையே ஒப்படைத்தோம். 2019ஆம் ஆண்டு பலவீனமான பொருளாதார நிலையைக் கொண்ட அரசைப் பொறுப்பேற்றுள்ளோம்.
நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நான்கரை வருடங்கள் பூர்த்தியாகும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்ற அரசமைப்பின் ஏற்பாட்டின் காரணமாக நிலையான அரசை எம்மால் ஸ்தாபிக்க முடியாமல்போனது.
இதனை எதிர்த்தரப்பினர் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அரசு கடந்த பெப்ரவரி மாதம் அரச நிர்வாக செலவுகளுக்காக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த கடன் பெறும் எல்லையை அதிகரிக்கும் பிரேரணையை எதிர்த்தார்கள்.
மத்திய வங்கி அதிகாரிகளை கோட்டா அச்சுறுத்தவில்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுக் குரலை உயர்த்தி அரச அதிகாரிகளுடன் கதைக்கும்போது அரசு அரச ஊழியர்களை அச்சுறுத்துவதாகக் குறிப்பிடுகின்றார்கள்.
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை ஜனாதிபதி அச்சுறுத்தவில்லை. அதற்கான தேவையும் கிடையாது. ஜனாதிபதி அமைச்சரவையின் பிரதானி என்ற பதவியில் இருந்துகொண்டு மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தற்போது வங்கி நிர்வாகம் முறையாகச் செயற்படுகின்றது. இதன் பயனை மக்களே பெறுகின்றார்கள்”