தமிழரசின் தலைமையே தோல்விக்குக் காரணம் கட்சி மறுசீரமைப்பு அவசியம் – சுமந்திரன்
“மக்களின் ஆணையின்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கின்றார்கள். அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்குக் காரணம். உடனடியாகக் கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம்” எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களை வழங்க வேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டோம். இப்போது அதில் அரைவாசி எண்ணிக்கைதான் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதாவது 10 ஆசனங்கள். இது மிக சொற்பம்.
இது நாங்கள் எதிர்பாராத ஒரு பின்னடைவு. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எங்களுக்கு இப்படியான பின்னடைவு இருந்த போதிலும், அந்தத் தேர்தல் முறைமை ரீதியாக – சூழல் வித்தியாசம் காரணமாக அந்தப் பின்னடைவிலிருந்து மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுத்தோம்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள முறை பல கரிசனைகளை எழுப்புகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த மக்கள் தீர்ப்பை நாம் பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொள்வதுடன், அந்த நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாட்டில் உடனடியாக நாங்கள் இறங்குவோம்.
மக்களுடன், அடிமட்ட தொண்டர்களுடனான கலந்துரையாடல்கள், எங்களுக்குள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் மூலம் பொதுத்தேர்தல் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிந்து, உடனடியாகக் கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.
எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் வழக்கம் போல் இரண்டு பக்கமும் போயிருக்கிறார்கள் என்றால் அது சரியாக அமையாது. கடும் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பக்கமாக சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் போலித் தமிழ்த் தேசியவாதிகள் என நாங்கள் வர்ணிப்பதுண்டு. ஆனால், அவர்களுக்கும் ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
ஆனால், வடக்கு, கிழக்கை ஒட்டுமொத்தமாகச் சேர்த்து பார்க்கின்றபோது, அரசுடன் இணைந்த செயற்படும் அணிகளின் திசையிலும் ஒரு பகுதி மக்கள் கூடியிருக்கின்றார்கள். அதன் ஒரு பிரதிபலிப்பாக அம்பாறையில் இம்முறை ஒரு தமிழ் பிரதிநிதித்துவமும் கிடைக்காமல் போயுள்ளது.
மட்டக்களப்பில் நாம் 2 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளோம். வன்னியில் 3 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் விட மோசமாக யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளோம். யாழ்ப்பாணத்தில் வெளியே எங்களைவிட அதிக ஆசனங்களாக 4 உள்ளன.
இந்தப் பின்னடைவு சம்பந்தமாக கட்சிக்குள் சில கலந்துரையாடல்களை நடத்துவோம். அதிலும் முக்கியமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை, கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பொதுத்தேர்தலில் தோற்றிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைமை தோற்றதாக கருதலாம். அவர்கள் ஒருசில வாக்குகளால் தோற்கவில்லை. அவர்கள் மோசமாகத் தோற்றுள்ளார்கள். ஆகவே, அது குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
இந்த பின்னடைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடும் நிச்சயமாக ஒரு காரணமாக அமைந்தது. வெளி அழுத்தங்களுக்கு மேலதிகமாக, கட்சிக்குள் ஒற்றுமையின்மையும், ஒரு சிலரைத் தோற்கடிக்க வேண்டுமென பகிரங்கமாகக் கூறிச் செயற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. இது சம்பந்தமாக விமலேஸ்வரி என்ற பெண்ணுக்கு எதிராக மட்டுமே கட்சி நடவடிக்கை எடுத்தது. அதைத்தவிர, பதவியில் இருந்த கட்சி அங்கத்தவர்கள் பலர் கட்சி வேட்பாளர்கள் குறித்து தாக்கிப் பேசியும், எழுதியும் வரப்பட்டது. இது குறித்து நான் கட்சித் தலைமையிடம் பல தடவை கூறியிருக்கின்றேன். ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறிதரன் பலமுறை கட்சித் தலைமையிடம் முறையிட்டார். எழுத்திலும் ஆதாரங்களுடன் கட்சித் தலைவரிடம் தெரிவித்தார். அவர்கள் எவருக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்டவில்லை.
ஓர் அரசியல் கட்சி தேர்தலைச் சந்தித்தபோது, அந்தக் கட்சிக்குள் இருந்தே, கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயற்படுவது பாரதூரமான தவறு. அவர்கள் உடனடியாகக் கட்சியை விடடு நீக்க வேண்டிய பாரதூரமான விடயம். அவர்களைக் கட்சியை விட்டு நீக்காதது கட்சியின் பாரதூரமான பின்னடைவுக்குக் காரணம்.
கட்சிக்குள் உள்ளிருந்து கொண்டு, சொந்தக்கட்சிக்கு எதிராகச் செயற்படுவது பாரதூரமானது. இந்த விடயம் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
அவர்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டுமெனக் குற்றஞ்சாட்டினார்களோ, அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இறுதி நாட்களில் கூட, சிறிதரனையும், சுமந்திரனையும் தோற்கடிக்க வேண்டும் எனத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் இதை வெற்றியாகச் சொல்ல முடியாது.
இனிவரும் நாட்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எழுச்சி இளைஞர்களின் கையில் உள்ளது. ஒரு மாற்றம் வேண்டுமென்பதைத் தெட்டத்தெளிவாக மக்கள் கட்சிக்கு அடித்துரைத்துள்ளனர். அதனால் அது நடைபெற வேண்டும். மக்களின் நம்பிக்கையை எங்கள் மீது சுமத்தியுள்ளதன் காரணமாக மக்களால் கொடுக்கப்பட்ட அந்த ஆணையை நாம் சிர மேல் கொண்டு, கட்சி மீளெழுச்சியையும் நாங்கள் பொறுப்பேற்று முன்கொண்டு செல்வோம்” – என்றார்.