அரசுடன் இணைந்து பயணிக்க தமிழ்க் கூட்டமைப்பு தயார் – இரா.சம்பந்தன்
“நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. இன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூஜை இடம்பெற்றது. அந்த வழிபாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதில் அவர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இம்முறை நடைபெற்ற தேர்தலை ஒரு ஜனநாயகத் தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி, நன்கொடை கொடுத்து, மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களைப் பெற்றுப்கொண்டுள்ளனர்.
சிறிய சிறிய தமிழ்க் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளைப் பிரித்துள்ளன. இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட்டமைப்புக்கு ஒன்பது ஆசனங்களே கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ரீதியிலும் கூட்டமைப்புக்கு மேலும் ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வும் வழங்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், ஆட்சி அமைக்கும் அரசின் நிலைபாட்டைக் கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம்” – என்றார்.