ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய லோகார் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை மர்ம நபர்கள் வெடிக்க செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், போரை நிறுத்த தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தலிபான் அமைப்புகும், அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் தனது படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.