சீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்த அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின்பேரில் சீனத் தூதரகக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொலிஸாரும், அதிகாரிகளும் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க- சீன உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சுமத்தி உள்ளது. சீனா தனது ஹூஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செங்டுவில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா அமெரிக்காவிற்கு உத்தரவிட்டது.
அமெரிக்க உத்தரவை தொடர்ந்து ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் நேற்றுமுன் தினம் மூடப்பட்டதோடு, அதில் பணி புரிந்தவர்களும் சுமார் 4 மணியளவில் வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் அங்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் அந்த தூதரகத்தின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில், தூதரக நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா உத்தரவிட்ட சிறிது நேரத்தில், தூதரக ஊழியர்கள் எதையோ போட்டு தீயிட்டு எரித்த தகவல் வெளியானது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்த நிலையிலும், தீயணைப்பு வீரர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லையாம்.
இதற்கிடையில், அந்த சீன தூதரகம், உளவு பார்க்கும் மையமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஹூஸ்டனில் உள்ள அந்த சீன தூதரகம் விலைமதிப்பற்ற மருத்துவ ஆராய்ச்சிகளை திருடுவதற்காக சீன அரசால் பயன்படுத்தப்பட்டதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் மூக்கை நுழைக்க முயன்றதாகவும் பல அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த தூதரக அலுவலகம், அமெரிக்காவால் நுழைய முடியாத அளவு இரும்புக்கோட்டை போல் இருந்ததாகவும், பல முக்கிய உளவு வேலைகளை ஒருங்கிணத்து செயல்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, சீன தூதரகத்தை மூடியுள்ளதோடு நிறுத்தாமல், டிக் டாக் போன்ற சீன செயலிகளை தடை செய்யவும், ஹாங்காங்கில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டம் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்களுக்கு தடைகள் விதிக்கவும் திட்டமிட்டு வருகிறது.