மாற்றுக் கட்சியை உதறி எறியுங்கள்; கூட்டமைப்புக்கு ஆணை தாருங்கள் – சம்பந்தன்

“நான் தமிழ் மக்களிடம் மிகவும் தாழ்மையாகவும் அன்பாகவும் கேட்டுக்கொள்வது என்னவெனில் மாற்றுக் கட்சிகளை உதாசீனம் செய்யுங்கள்; நிராகரியுங்கள். அந்தக் கட்சிகளால் உங்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தனிப்பட்ட நபர் ஒருவர்  நாடாளுமன்றத்துக்கு வந்து எதையும் செய்ய முடியாது. தனிப்பட்ட நபர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலமான ஓர் அணியாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவையுங்கள். தனிப்பட்ட நபர்களை முற்றாக நிராகரியுங்கள். எமக்கு ஆணையைத் தாருங்கள்.

மாற்றுக் கட்சி என்ற பெயரில் போட்டியிடும் தனிப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஓர் ஆசனத்தை வென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் ஆதரவு இல்லை. வன்னியிலும் ஆதரவு இல்லை. எனவே, யாழ்ப்பாணத்தில் மட்டும் ஓர் ஆசனத்தை வென்று எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. ஆனபடியால் தமிழ் மக்கள் தங்கள் முழுமையான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களுக்குத் தாருங்கள் என்று மிகவும் தாழ்மையாகவும் அன்பாகவும் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!