அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழருக்குத் தீர்வு வழங்கப்படமாட்டாது – கெஹலிய
“தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படமாட்டாது. பொதுக் காரணிகளின் நிமிர்த்தம் தீர்வு வழங்கப்படும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.”
– இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
“அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் புதிய அரசில் பரிசீலனை செய்யப்படும். அனைத்து இன மக்களும் புதிய அரசில் உரிமைகொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெறும் என்பதை உறுதியாகக் குறிப்பிடுகின்றேன். ஆளும் தரப்பினர் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். இவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது.
அரசமைப்பு திருத்தம், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவற்றை குறிப்பிட்டுக் கொண்டு கூட்டமைப்பினர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் . தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு , கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கூட்டமைப்பினர் எக்காலங்களிலும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இதற்கு நல்லாட்சி அரசை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் நோக்குடனும், நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்திலும் தமிழ் மக்களுக்கான தீர்வைக் கூட்டமைப்பினர் கோருகின்றார்கள். இதனை ஒருபோதும் செயற்படுத்த முடியாது.
அரசமைப்பின் 19ஆவது திருத்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
புதிய அரசில் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பில் எழுந்துள்ள யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்படும்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இந்தத் தீர்வு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமையாது. அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தீர்வு முன்வைக்கப்படும்.
புதிய அரசு அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தியதாக அமைய வேண்டும் எனவும், அதற்கான செயற்திட்டங்களைச் செயற்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அனைத்து இன மக்களும் உரிமைகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு” – என்றார்.