ஹொங்கொங் மக்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்திரேலியா முடிவு
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹொங்கொங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம்.
சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அவுஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹொங்கொங் மக்களுக்கான விஸா கெடுவை நீடிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஸ்காட் மாரிசன் தற்போது தெரிவித்துள்ளார்.
அதன்படி கல்வி மற்றும் பணி நிமித்தமாக அவுஸ்திரேலியாவில் உள்ள ஹொங்கொங் மக்களுக்கு 5 வருடம் விஸா நீடிப்பு வழங்கவும் இதன் வழியாக நிரந்தர குடியுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஹொங்கொங்கைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிர்காலத்தில் குடிபெயரவும் வழிவகை செய்யப்படும் அவுஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா தனது செயலுக்கான முழு விளைவையும் ஏற்கும் என சீனா எச்சரித்துள்ளது.