புதிய அரசமைப்பின் ஊடாக அதிகாரப் பகிர்வு – வாசுதேவ திட்டவட்டம்
“புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதிகாரப்பகிர்வு இல்லாதொழிக்கப்படாது. அதிகாரப் பகிர்வுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.”
– இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம் இல்லை என்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் வினவியபோதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைகளுக்குத் தற்போது பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு. எனது நிலைப்பாடும் அதுவே.
ஏனெனில் எமது அரசுக்கு மாகாண நிர்வாகங்களுடன் ஒத்துழைத்துச் செயற்படக்கூடிய ஆற்றல் இருக்கின்றது.
புதிய அரசமைப்பொன்று இயற்றப்படும்போது ’13’ என்றொரு விடயம் இருக்காது. ஆனாலும், மாகாண சபைகளுக்குப் புதிய அரசின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படும். மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள், மத்திய அரசு ஆகியவற்றுக்கிடையில்தான் அதிகாரப் பகிர்வு இடம்பெறும்” – என்றார்.