இந்தியாவில் வைரக்கற்கள் பதித்த மாஸ்க் விற்பனைக்கு வந்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர். மாஸ்க் அணிவது அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படியான மாஸ்க்கிலும் பல வித வடிவங்கள் வந்துவிட்டன. உடைக்கு ஏற்றார் போலவும் மாஸ்க் வந்துட்டது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஒருவர் தங்கத்தினால் ஆன ரூ.2.89 இலட்சம் மதிப்பிலான மாஸ்க் அணிந்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில், சூரத்தில் வைரக்கல் பதித்த முகக்கவசங்களை நகைக்கடை ஒன்று விற்பனை செய்து வருகிறது. நான்கு விதமான வடிவங்களில் இந்த மாஸ்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாஸ்குகள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து நகைக்கடை உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறியதாவது:
”வாடிக்கையாளர் ஒருவர் தன் வீட்டுத் திருமணத்துக்கு மணமகன், மணமகளுக்கு இந்த வைரம் பதித்த மாஸ்கை பரிசாக அளிப்பதற்காக செய்து கொடுக்கக் கேட்டார். எனவே எங்கள் வடிவமைப்பாளர்களிடம் இதை தயாரிக்குமாறு கேட்டிருந்தோம். அதனை வாடிக்கையாளர் வாங்கிச் சென்றார். அப்போது முதல் இதையே ஒரு விற்பனைப் பொருளாக மாற்ற நினைத்து, பலதரப்பட்ட வடிவமைப்புகளில் தயாரித்தோம்.
சுத்த வைரம், அமெரிக்க வைரக்கற்கள் உடன் தங்கமும் சேர்க்கப்பட்டு இந்த மாஸ்க்குகள் தயாரிக்கப்படுகிறது. யெல்லோ கோல்டுடன் அமெரிக்க வைரக்கற்களுடன் தயாரிக்கப்படும் மாஸ்க் விலை ரூ.1.5 லட்சம், வெள்ளை தங்கம் மற்றும் உண்மையான வைரத்துடன் தயாரிக்கப்படும் மாஸ்க் ரூ.4 லட்சம் ஆகும். இந்த மாஸ்க்கிலிருந்து தங்கத்தையும் வைரத்தையும் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் தனியாக எடுத்து விடலாம்” – இவ்வாறு அவர் கூறினார்.