தமிழ் பிள்ளைகளின் கழுத்திலிருந்து சயனைட் குப்பிகளை அகற்றினோம் – மஹிந்த
“கடந்த போர்க் காலத்தில் துப்பாக்கியை கையில் எடுத்த பயங்கரவாதிகளுடன் போரிட்டோமே தவிர தமிழ் மக்களுடன் அல்ல. வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சயனைட் குப்பிகளை அகற்ற முடிந்தமையை பாக்கியமாகக் கருதுகின்றேன். பயங்கரவாதத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தமையாலேயே இன்று நாட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கேகாலை, கலிகமுவயில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய அரசு அதிகாரத்துக்கு வந்தவுடன் உடனடியாக மீள் ஏற்றுமதியை நிறுத்தியதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான எங்கள் ஆட்சியின் போது நாட்டுக்கு உணவு வழங்கிய விவசாய மக்களுக்கும், விவசாயத்துக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி அரசு அதிகாரத்துக்கு வந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் விவசாயத்தைக் கவனிக்காமல் விட்டது.
தேசிய டயர் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிiப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். அதன் மூலம் தேசிய இறப்பர் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” – என்றார்.