முஸ்லிம்களை தவறாக வழி நடத்த சிலர் முயற்சி – உவைஸ்
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கோட்டாபயவையும், பிரதமரையும் மிக மோசமாக விமர்சித்து முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்கிய சில அரசியல் சக்திகள் முஸ்லிம் வாக்கு வங்கியை சூறையாடுவதற்கு தவறாக வழிநடத்தப்பட்டனர். அதன் மூலம் முஸ்லிம் சமூகம் கைகளை சுட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொள்ள முடியாது என்பதை மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முஸ்லிம் சம்மேளன தேசிய அமைப்பாளர் ஏ. எல்.எம். உவைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் சமூகம் தேசியக் கட்சிகளிலிருந்து விலகி நிற்பதால் எமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம்கள் தனிமைப்படுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் பதவியில் இருக்கப் போவதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த ஆட்சியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள எட்டு வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்து, தேசியப் பட்டியல் மூலம் வழங்கப்படவுள்ள இரண்டு எம். பி.க்களுடன் பத்து பேரும் தெரிவாவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக் கொண்டு எதனையும் சாதிக்க முடியாது. பெரும்பான்மை இனத்தை எமது நேச சக்திகளாக அரவணைத்துச் செயற்பட வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்து எட்டு மாதங்களில் ஒரு தடவையேனும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகப் பேசியுள்ளாரா? இந்தநிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 5 – ஆம் திகதி நடக்கும் பாராளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும். அதன் மூலம் முஸ்லிம்கள் கூடுதல் பயனை அடைந்துகொள்ள முடியும்” – என்றார்.